பேரறிஞர் அண்ணா 117ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனர் திருநாள்

நிகழ்வு நாள் : 15.09.2025

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், நிறுவனம் தோற்றுவிப்பதற்கு முழுமுதற் காரணமாக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் (செப்டம்பர்-15) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் திருநாளாக இன்று (15.09.2025) வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முற்பகல் 11.00 மணிக்கு முதல் நிகழ்வாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர், திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையில் நிறுவன வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது.

இதன்பிறகு தொடங்கப்பெற்ற திருநாள் நிகழ்வில், நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் து. ஜானகி அவர்கள் வரவேற்புரையாற்றிட நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.

நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் மணிகோ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத் தலைவர், திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் “அண்ணாவின் அரசியல் அணுகுமுறைகள்...” எனும் பொருண்மையில் பேருரையாற்றினார், அவர்தம் உரையில், பேரறிஞர் அண்ணாவை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், துண்டு துண்டாக சில நிகழ்வுகளைப் பேசுவது அண்ணாவை புரிந்து கொண்டதாக ஆகாது என்றார். மேலும், அண்ணாவின் அரசியல் அணுகுமுறை தொண்டர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது என்றும், இயக்கத் தோழர்களின் குடும்பச் சிக்கல்களைக் கூட அண்ணா தீர்த்து வைத்தார் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார். என்றென்றும் தந்தை பெரியாரே அண்ணாவின் தலைவராவார் என்றும். அண்ணாவின் அரசியல் அணுகுமுறையே தமிழ்நாடு வளப்பட மூலக்காரணமாகத் தொடர்கிறது என்றார்.

இறுதியாக நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் கா. காமராஜ் அவர்கள் நன்றி நவின்றார். நிறுவன முதுகலைத் தமிழ் மாணவி செல்வி மு. கார்த்திகா இணைப்புரை வழங்கினார், இவ்விழாவில் தமிழார்வலர்கள், நிறுவனப் பேராசிரியர்கள், நிறுவன மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி 1: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு, நிறுவனத் தலைவர், திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (பணி நிறைவு) அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது. உடன் திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க. திருநாவுக்கரசு அவர்கள், நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், நிறுவனப் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்.

படச்செய்தி 2: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா 117ஆம் பிறந்த நாள் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிறுவனர் நாள் நிகழ்வில் திராவிட இயக்க ஆய்வாளர் திரு. க. திருநாவுக்கரசு அவர்கள் “அண்ணாவின் அரசியல் அணுகுமுறைகள்...” எனும் பொருண்மையில் பேருரையாற்றினார்,