பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான“மொழியியல் நுணுக்கப் பயிற்சி”

நிகழ்வு நாள் : 01.11.2023

சென்னை, தரமணி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு அரசு நிதிநல்கையில் பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான “மொழியியல் நுணுக்கப் பயிற்சி 01.11.2023 முதல் 28.11.2023 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (01.11.2023) முற்பகல் 10 மணிக்கு நிறுவனத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கமாகப் பயிற்சி இணை ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா அவர்கள் வரவேற்புரையாற்றிட, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் அவர்கள் தலைமையுரையாற்றினார். நிறுவன தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார் அவர்கள் பயிலரங்க நோக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் தம் உரையில்... தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பள்ளி மாணவர்களுக்கான தமிழ்த் திறனறித் தேர்வுப் பற்றியும், மாணவர் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்புப் பற்றியும், மேலும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் மொழி வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு செலுத்திவரும் கவனத்தையும் அதில் தமிழ் வளர்ச்சித் துறையின் பங்களிப்பையும் விளக்கிக் கூறினார். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் திறனறித் தேர்வுகளில் இவ்வாண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும் என்றார். மேலும் இப்புத்தாக்கப் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுவது போற்றத்தக்கதாகும் எனவும் கூறினார். தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட உதவிக் கல்வி அலுவலர் திரு. தணிகைவேலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மைசூரு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மேனாள் இயக்குநர் மற்றும் தேசிய நுண்தேர்வு மையத் தலைவருமான பேராசிரியர் பொன் சுப்பையா அவர்கள் பயிலரங்க தொடக்கவுரையாற்றினார். நிறுவன மாணவர் திரு. செ.செல்வம் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இறுதியாக நிறுவன முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி க.சிந்தாமணி நன்றிவுரை ஆற்றினார். இவ்விழாவில் மொழியியல் நுணுக்கப் பயிற்சி பெறவுள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களோடு நிறுவனப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் நிறுவன மாணவர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

படச்செய்தி :
01.11.2023 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான மொழியியல் நுணுக்கப் பயிற்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் வாழ்த்துரையாற்றுகிறார். உடன் நிறுவன இணைப் பேராசிரியர் முனைவர் பெ.செல்வக்குமார், மைசூரு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் மேனாள் இயக்குநர் மற்றும் தேசிய நுண்தேர்வு மையத் தலைவருமான பேராசிரியர் பொன் சுப்பையா, நிறுவன இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட உதவிக் கல்வி அலுவலர் திரு. தணிகைவேலு மற்றும் நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா ஆகியோர்.